This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Thursday, October 17, 2013

கடல் துயரங்கள்!

தொடரும் லாம்பெதுசா துயரங்களுக்குப் பின் ஐரோப்பிய நாடுகளின் பெரும் விவாதப் பொருளாகியிருக்கின்றனர் ஆப்பிரிக்க அகதிகள்.
ஆப்பிரிக்க நாடுகளுக்கே உரிய வறுமை, ஆட்சியைக் கைப்பற்ற நடக்கும் உள்நாட்டுச் சண்டைகள், இனக்குழு மோதல்கள் காரணமாக உயிரைக் காத்துக்கொள்ள தத்தமது நாடுகளைவிட்டு குடும்பம் குடும்பமாக வெளியேறுகின்றனர் ஆப்பிரிக்கர்கள். சொத்துபத்துகளை விற்று இடைத்தரகர்கள் உதவியுடன் சட்ட விரோதமாக இப்படி வெளியேறும் ஆப்பிரிக்கர்களின் முதல் தேர்வு ஐரோப்பிய நாடுகள். அதிலும், ஆப்பிரிக்கக் கடலோரத்திலிருந்து சுமார் 180 மைல்கள் தொலைவில் இருக்கும் லாம்பெதுசா தீவுதான் அகதிப் படகுகளின் எளிய இலக்கு.
சோமாலியா, எரித்திரியா நாடுகளைச் சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட அகதிகள் கடந்த வாரம் வந்த படகு பளு தாங்காமல் மத்திய தரைக்கடலில், லாம்பெதுசா தீவுக்கு அருகில் மூழ்கியது; 319 பேர் இறந்தனர்; 155 பேர் மீட்கப்பட்டனர்.
லாம்பெதுசா விபத்துக்குப் பிறகு இத்தாலி, மால்டாவுக்கு இடைப்பட்ட கடல் பகுதியில் வந்த மற்றோர் அகதிகள் படகில் இயந்திரம் பழுதாகித் தடுமாறியது. அப்போது மால்டா நாட்டு ரோந்து விமானம் ஒன்றைக் கடல் பகுதியில் கண்ட அகதிகள், தங்களை விமானி கவனிக்க வேண்டும் என்ற நோக்கில் படகின் மேல் தளத்தில் திரண்டனர். அவர்களில் பலர் ஒரே சமயத்தில் ஒரு பக்கமாகக் குவியத் தொடங்க அந்தப் படகு கவிழ்ந்தது; 27 பேர் இறந்தனர், 203 பேர் மீட்கப்பட்டனர். முன்னதாக இதேபோல தனித்தனிப் படகுகளில் வந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட அகதிகள் பத்திரமாக மீட்கப்பட்டு முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
உண்மையில் ஆவணங்களோ ஆதாரங்களோ இல்லாத நிலையில், இந்தக் கணக்கு எல்லாமே ஊகக் கணக்கு என்றுதான் சொல்ல வேண்டும். கடலோடு கடலாக அகதிகள் கரையும் துயரம் ஒருபுறமிருக்க, அகதிகள் விஷயத்தில் கொஞ்சம் கரிசனையுடன் நடந்துகொள்ளும் ஐரோப்பிய நாடுகளில் வலதுசாரிகளின் கை இப்போது ஓங்குகிறது. ‘‘அகதிகளால் நம் நாட்டின் அமைதி கெடுகிறது; மக்கள்தொகை அதிகரிக்கிறது; எதிர்காலத்தில் இது சமூகப் போட்டியாக உருவெடுக்கும்’’ என்ற பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றனர் ஐரோப்பிய வலதுசாரி தேசியவாதிகள். மக்களிடமும் இது எடுபடுகிறது. சமீபத்திய பிரான்ஸ் உள்ளாட்சித் தேர்தலில் இந்தப் பிரச்சாரத்தின் தாக்கத்தைப் பார்க்க முடிந்தது. பரவும் இந்த ஜுரத்தின் வெளிப்பாடுகளில் ஒன்றுதான் ஆஸ்திரேலியா சமீபத்தில் தமிழகத்தில் மேற்கொண்ட சுவரொட்டிப் பிரச்சாரம்.
‘‘அகதிகள் மீதான வெறுப்பு அநீதியானது; அதேசமயம், அவர்கள் உள்நாட்டின் பிரச்சினையாகிவிடாமல் பரிவுகாட்ட வேண்டும். அரசியல் தலைமைகள் இதுபற்றிச் சிந்திப்பது உடனடித் தேவை’’ என்கின்றனர் ஐரோப்பிய அறிவுஜீவிகள். இந்தியாவுக்கும் இது பொருந்தும்!

காட்டிக் கொடுத்தவர்களை தீர்த்துக் கட்டும் தீவிரவாத படை

இமாம் அலி
இமாம் அலி
இமாம் அலியை காட்டிக் கொடுத்தவர்களையும் என்கவுன்ட்டரில் சுட்டு வீழ்த்திய போலீஸ் அதிகாரிகளையும் பழி தீர்க்க தீவிரவாதிகளின் புதிய அமைப்பு திட்டமிட்டிருந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
‘அல்-முன் தஹீம் ஃபோர்ஸ் (ஏ.எம்.எஃப்)’ போலீஸ் பக்ருதீன் உள்ளிட்ட தீவிரவாதிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரித்துக் கொண்டிருக்கும் சிறப்பு புலனய்வுப் பிரிவு அதிகாரிகள் இப்போது அதிகமாக இதைத்தான் உச்சரிக்கிறார்கள். போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பாண்டு அலி, அபுபக்கர் சித்திக், செருப்புக்கடை சையது, பன்னா இஸ்மாயில் இவர்கள் எல்லாம் ஒரு காலத்தில் இமாம் அலியின் ஜிகாத் படையில் இருந்தவர்கள். 29.09.2002-ல் இமாம் அலி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு இந்த ஜிகாத் படை 3 அணிகளாக பிரிந்துவிட்டது. அதில் ஒன்று போலீஸ் பக்ருதீன் தலைமையிலான அணி. இந்த அணிக்கு வெளிப்படையாக பெயர் எதையும் அறிவிக்கவில்லை என்றாலும், ‘ஜிஹாத்’ என்ற பெயரை உள்ளுக்குள் வைத்திருக்கிறார்கள்.
‘இஸ்லாத்துக்கு எதிரான இந்துக்களையும் அவர்களை வழி நடத்திச் செல்லும் தலைவர்களையும் பழி தீர்ப்போம்’ என்பதுதான் ஜிஹாத்துக்கு இவர்கள் தரும் விளக்கம். இவர்கள் இல்லாமல், இன்னொரு கோஷ்டி 2004-ல் புதிதாக ஒரு அமைப்பை உருவாக்கியது. அதுதான் அல்-முன் தஹீம் ஃபோர்ஸ்! இந்த அமைப்பைச் சேர்ந்தவர்களில் சிலரை தற்போது வளைத்துப் பிடித்திருக்கிறது சிறப்புப் புலனாய்வுப் பிரிவு போலீஸ். பிடிபட்ட நபர்களை வைத்து இன்னும் சிலரையும் நெருங்கிக் கொண்டிருக்கிறது. வியாழன் மாலை நமக்குக் கிடைத்த இந்தச் செய்தியை உறுதிப்ப டுத்துவதற்காக போலீஸ் வட்டாரத்து அதிகாரிகள் சிலரிடம் விசாரித்தோம். அவர்கள் தந்த தகவல்கள் அதிர வைப்பவையாகத்தான் இருந்தன.
“அல்-உம்மா தீவிரவாதிகள் அல்-முன் தஹீம் ஃபோர்ஸ் என்ற அமைப்பை உருவாக்கி ரகசியமாக செயல்பட்டுக் கொண்டிருப்பது உண்மைதான். இதை அவர்கள், ‘பழிவாங்க உறுதிமொழி ஏற்கும் படை’ என்று சொல்கிறார்கள். 2004-ல் மதுரை மற்றும் சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகளுக்கு இந்த அமைப்பின் பெயரில் ஒரு கடிதம் வந்தது.
அதில், ‘இமாம் அலியை காட்டிக் கொடுத்தவர்களையும் அவரை சுட்டுக்கொன்ற போலீஸ் அதிகாரிகளையும் பழி தீர்க்காமல் விடமாட்டோம்’ என்று இருந்தது. கடிதத்தில் இருந்த கையெழுத்தை வைத்து, மதுரையைச் சேர்ந்த ஜெய்னுல் ஆரிப் என்பவரை பிடித்து விசாரித்தோம். ஆனால், கடிதத்திற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என அவர் மறுத்துவிட்டார்.
அத்துடன் ஆளைத் தேடு வதை விட்டுவிட்டு, போலீஸ் இன்ஃபார்மர்களுக்கும், இமாம் அலி ஆபரேஷனில் இருந்த போலீஸ் அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அவர்களுக்கு தெரியாத வகையில் பலப்படுத்தினோம். கடிதம் எழுதியவர்கள் அத்தோடு நிற்கவில்லை. காரியத்திலும் இறங்கினார்கள். அதுபோன்ற நேரங்களில் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளை நாங்கள் எச்சரிக்கையோடு இருந்து காப்பாற்றியும் இருக்கிறோம்.
பொதுவாக மதத் தீவிரவாதிகள் ஒரு கோஷ்டி இன்னொரு கோஷ்டியுடன் தொடர்பில் இருக்க மாட்டார்கள். ஆனால், போலீஸ் பக்ருதீன் சம்பந்தப்பட்ட சில விஷயங்களில் அல்-முன் தஹீம் ஃபோர்ஸை சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்.
மதுரை மற்றும் நெல்லை பகுதிகளில்தான் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அல்-முன் தஹீம் ஃபோர்ஸை சேர்ந்த முக்கிய நபர்கள் சிலரையும் போலீஸ் படை கிட்டத்தட்ட நெருங்கிவிட்டது. விசாரணையின் போக்கு பாதிக்கக்கூடும் என்பதால் இப்போதைக்கு இதற்கு மேல் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறோம்” என்று கூறி முடித்துக் கொண்டார்கள்.

Wednesday, October 16, 2013

நமக்குத் தேவை டான் பிரவுன்கள்

சுந்தர ராமசாமியின் 'ஜே.ஜே: சில குறிப்புகள்' 1981-ல் வெளிவந்தது. அதில் ஒரு வரி அக்காலத்தில் மிகவும் பிரபலம். வணிகக் கேளிக்கை எழுத்துகளை அவை தமிழில் இருப்பதனாலேயே பாராட்டுவதைப் பற்றி நாவலுக்குள் வந்து சுந்தர ராமசாமியே சொல்வதுபோல அவ்வரி வரும்: ‘வாந்திபேதியில் தமிழ் வாந்திபேதி என்றும் வேசைத்தனத்தில் தமிழ் வேசைத்தனம் என்றும் உண்டோ?’
வணிக எழுத்துக்கு எதிரான சாட்டைச் சொடுக்கல்களால் ஆனது 'ஜே.ஜே: சில குறிப்புகள்'. ஆச்சரியம் என்னவென்றால், இந்த நேரடியான தாக்குதல் காரணமாகவே 'ஜே.ஜே: சில குறிப்புகள்' அந்த வணிகக் கேளிக்கை எழுத்து வட்டாரத்தில் பிரபலமானது. விளைவாக தமிழில் அன்று வரை எந்த ஒரு தீவிர இலக்கியப் படைப்புக்கும் கிடைக்காத பரவலான வாசிப்பு அதற்குக் கிடைத்தது.
அன்றைய வாசிப்புச் சூழலை விவரித்தால்தான் இது புரியும். நவீன தமிழிலக்கியம் புதுமைப்பித்தன் கால கட்டத்தில் தீவிரமான வீச்சுடன் ஆரம்பித்தது. ஆனால், விரைவிலேயே அந்த அலை அணைந்தது. கல்கி பெருவாரியான வாசகர்களை ஈர்த்து ஒரு புதிய அலையைத் தொடங்கிவைத்தார். எளிமையான மொழியில் மனக்கிளர்ச்சியூட்டும் எழுத்து முறை தமிழில் வேரூன்றியது. அந்த வகை எழுத்து ஒரு வெற்றிகரமான வணிகமாக இருக்க முடியும் என நிரூபணமாகியது.
தமிழின் முக்கியமான வார இதழ்கள் உருவாகிவந்த காலகட்டம் அது. தொடர்கதை என்ற வடிவம் லட்சக் கணக்கானவர்களைச் சென்றடைந்தது. அகிலன், ஆர்.வி., எல்.ஆர்.வி. என்று ஓர் எழுத்தாளர் வரிசையே இருந்தது. அவர்களையே இலக்கியவாதிகளாக அன்றைய வாசகர்கள் மட்டுமல்ல; கல்வித் துறையினர்கூட நம்பினார்கள். விருதுகளும் அங்கீகாரங்களும் அவர்களுக்கே சென்றன.
அன்று தமிழில் உலகின் எந்த மொழியிலும் எழுதிய இலக்கிய மேதைகளுக்கு நிகரான படைப்பாளிகள் உருவாகியிருந்தனர். லா.ச.ரா.,கு.அழகிரிசாமி,ப.சிங்காரம், சுந்தர ராமசாமி, தி.ஜானகிராமன், அசோகமித்திரன் போன்றவர்களின் மகத்தான படைப்புகள் அப்போதுதான் வந்தன. அவை வாசகர்களைச் சென்றடையவே அன்று வழியில்லை. சில நூறு பிரதிகள் அச்சிடப்பட்ட சிற்றிதழ்களில் அவர்கள் எழுதினார்கள்.
அவர்களின் நூல்கள் ஐந்நூறு பிரதிகள் விற்க பத்து வருடங்களாயின. புகழ் இல்லை, பணம் இல்லை. எவ்வகையிலும் மரியாதை இல்லை. வாசகர்கள் இருக்கிறார்களா என்றே தெரியவில்லை. ஆனாலும், புயல் காற்றில் தீபத்தைக் கையால் பொத்திக்கொண்டு செல்வதுபோல அவர்கள் இலக்கியத்தை முன்னெடுத்தார்கள். மனைவியின் நகைகளை விற்றுச் சிற்றிதழ் நடத்தினார்கள். அவர்களுடைய எழுத்துகள் மட்டும்தான் காலம் கடந்து இன்றும் வாசிக்கப்படுகின்றன.
‘ஜே.ஜே: சில குறிப்பு’களை வாசித்து மன எழுச்சி அடைந்து, நான் சுந்தர ராமசாமியைச் சென்று சந்தித்தேன். 15 ஆண்டுகளுக்கும் மேல் நீடித்த நட்புறவாக அது அமைந்தது. அவர் வழியாக வணிக எழுத்தின் மீது மிகுந்த எதிர்ப்பு உணர்வை நானும் உருவாக்கிக்கொண்டேன். மிகச் சிறுபான்மையினர் மட்டும் வாசிக்கும் தீவிர இலக்கியத்தின் பக்கம் என்னை நிறுத்திக்கொண்டேன்.
1990-களில் திடீரென்று ஒரு மாற்றம் நிகழ்ந்தது. ஒன்று, தொலைக்காட்சி மிகப் பெரிய கேளிக்கை ஊடகமாக மலர்ச்சி அடைந்தது. அதுவரை தொடர்கதை வாசித்துக்கொண்டிருந்தவர்கள் எல்லாம் தொலைக்காட்சித் தொடர்கள் பார்க்க ஆரம்பித்தனர். வாசிப்பு ஒரு கேளிக்கையாக இல்லாமல் ஆகியது.
அந்தக் காலி இடத்தில் ஒரு சிறு பகுதியை இலக்கியம் நிரப்ப ஆரம்பித்தது. ‘தினமணி’, ‘இந்தியா டுடே’, ‘சுபமங்களா’போன்ற இதழ்கள் நல்ல இலக்கியத்தை மக்களிடையே கொண்டுசேர்த்தன. அத்துடன் அன்று ஆப்செட் அச்சகங்கள் பெருகின. கணிப்பொறித் தொழில்நுட்பத்தில் நூல்களை வெளியிட ஆரம்பித்தபோது நூல் தயாரிப்பு எளிமையாக ஆனது. ஏராளமான பதிப்பகங்கள் வந்தன. அவர்கள் புத்தகச் சந்தை என்ற விற்பனை முறையை உருவாக்கி, நூல்களை மக்களிடையே கொண்டுசென்றார்கள். இணையம் வந்தபோது நூல்களைப் பற்றிய தகவல்கள் மக்களிடம் சென்றுசேர்வதும் எளிதாகியது. இன்று எல்லா இலக்கியவாதிகளின் படைப்புகளும் மறுஅச்சாகிக் கிடைக்கின்றன. இலக்கிய வாசிப்பு பல மடங்கு வளர்ந்துள்ளது. க.நா.சு-வும் சுந்தர ராமசாமியும் கனவு கண்டது நிகழ்ந்துள்ளது.
ஆனால், இதற்கு ஒரு மறுபக்கம் உள்ளது என இப்போது படுகிறது. இன்று இலக்கியம் வாசிப்பவர்கள் சிறுவர்களாக இருந்தபோது அன்று புகழுடன் இருந்த வணிக எழுத்துகளை வாசித்து வாசிப்புப் பழக்கத்தை அடைந்தவர்கள். அந்த வாசிப்பு வழியாக முதிர்ந்து அவர்கள் தீவிர இலக்கியம் நோக்கி வருகிறார்கள். அதுவே இயல்பான பாதை. ஆனால், இன்றுள்ள இளைய தலைமுறைக்கு அந்தப் பாதை இருக்கிறதா?
தீவிர இலக்கியம்தான் ஒரு ஆரோக்கியமான பண்பாட்டின் வளர்ச்சிக்கு உதவக்கூடியது என்பதில் ஐயமே இல்லை. வாழ்க்கையை நுட்பமாக அணுகவும் அதை வரலாற்றில் வைத்துப் புரிந்துகொள்ளவும் உதவக்கூடியவை இலக்கியப் படைப்புகளே. ஆனால், அவை வாசிக்கும் பயிற்சி கொண்டவர்களுக்கு உரியவை. வாசிக்கும் பயிற்சியை அளிப்பதற்கு எளிமையான, விறுவிறுப்பான புனைகதைகள் தேவை.
இன்று அத்தகைய வணிகக் கேளிக்கை எழுத்து அநேகமாக அழிந்துவிட்டது. சென்ற தலைமுறையில் சுஜாதா, பாலகுமாரன், இந்துமதி, வாசந்தி, சிவசங்கரி போன்ற நட்சத்திர அந்தஸ்து கொண்ட வணிகக் கேளிக்கை எழுத்தாளர்கள் இருந்தனர். அவர்கள் வாசகர்களைக் கவர்ந்து வாசிப்புக்குள் கொண்டுவந்தனர். அவர்களின் வாசகர்களில் ஒரு சாரார் பின்னர் இலக்கிய வாசகர்களாக ஆனார்கள்.
இந்தத் தலைமுறையில் அப்படி எவருமே இல்லை. அவ்வாறு நவீன வணிக எழுத்து நிறைய வந்தால் மட்டும்தான் லட்சக் கணக்கானவர்கள் தமிழில் வாசிக்க ஆரம்பிப்பார்கள். வாசிப்பு ஒரு சமூக இயக்கமாக நிகழும். அவ்வாறு 10 லட்சம் பேர் தமிழில் எதையாவது வாசித்தால்தான் அதில் 10 ஆயிரம் பேர் தரமான இலக்கியத்துக்கு வருவார்கள்.
அத்தகைய வணிகக் கேளிக்கை எழுத்து தமிழில் இல்லை என்றால், இளம் வாசகர்கள் ஆங்கிலத்தில்தான் அவற்றை வாசிக்க ஆரம்பிப்பார்கள். இன்று சுஜாதா இல்லை. ஆகவே, நம் இளைய தலைமுறை டான் பிரவுனையும் சேத்தன் பகத்தையும் வாசிக்கிறது. அவர்களில் நுண்ணுணர்வு உள்ளவர்கள் பின்பு நேராக ஓரான் பாமுக்குக்கும் முரகாமிக்கும் சென்றுசேர்கிறார்கள்.
க.நா.சுப்ரமணியமும் சுந்தர ராமசாமியும் வணிக எழுத்தை அத்தனை ஆவேசமாக எதிர்த்தார்கள் என்றால், அதற்கான காரணம் அது இலக்கியத்தை மறைத்தது என்பதுதான்; இலக்கிய மேதைகளும் பேரிலக்கியப் படைப்புகளும் தமிழில் இருந்தும் வணிக எழுத்தாளர்களும் கேளிக்கைப் படைப்புகளும் கொண்டாடப்பட்டன என்பதுதான். ஆனால், இனிமேல் அப்படி வணிக எழுத்து இலக்கியத்தை மறைக்க முடியாது. இன்றைய உச்சக்கட்டத் தகவல்தொடர்புமுறை எல்லாவற்றையும் கொண்டுசென்று சேர்த்துவிடும்.
ஆகவே, தமிழில் நமக்கு இன்று தேவை டான் பிரவுன்போல, ஸ்டீபன் கிங்போல,சேத்தன் பகத்போல ஈர்ப்புள்ள வணிக எழுத்தாளர்கள். அவர்களை உருவாக்கிக் கொண்டுசேர்க்க பதிப்பாளர்கள் முயல வேண்டும். இல்லையேல், அடுத்த தலைமுறையில் தமிழில் வாசிக்க யாரும் இருக்க மாட்டார்கள்!

எனக்கு வேண்டாம் அஞ்சு மில்லியன் டாலர்!

மொஹம்மத் இப்ராஹிம்
மொஹம்மத் இப்ராஹிம்
வீணாப் போன நோபல் பரிசுக்கு எத்தனை போட்டி! இவருக்கா அவருக்கா என்று மாசக் கணக்கில் ஆரூடம் பார்த்து, இறுதியில் உனக்கும் பெப்பே, உங்கப்பனுக்கும் பெப்பே என்று சொல்லிவிடுகிறது கமிட்டி. ஆனால், இங்கே பாருங்கள். ஒரு பரிசு காத்திருக்கிறது. அதுவும் கொஞ்ச நஞ்ச பரிசுத்தொகை இல்லை. அஞ்சு மில்லியன் டாலரை அள்ளிக் கொடுக்க ரெடி என்கிறது இந்த கமிட்டி. ஆனால் எனக்கு வேணாம், உனக்கு வேணாம் என்று அலறியோடுகிறார்கள் பிரகஸ்பதிகள். உலகம்தான் எத்தனை விசித்திரங்கள் நிறைந்தது!
சூடானில் பிறந்து லண்டனில் வசிக்கும் தொழிலதிபரான டாக்டர் மொஹம்மத் இப்ராஹிம், டெலிகாம் உலகில் ஒரு பெரியாள். ஆப்பிரிக்க தேசங்களில் பிரசித்தி பெற்ற செல்டெல் நிறுவனத்தைத் தோற்றுவித்தவர். பெரும் பணக்காரர். இவர் 2006ம் வருஷம் மோ இப்ராஹிம் ஃபவுண்டேஷன் என்றொரு அறக்கட்டளையை நிறுவி மேற்படி அஞ்சு மில்லியன் டாலர் பரிசுத் தொகையை அறிவித்தார். யாருக்கு இந்தப் பரிசு?
ஆப்பிரிக்க நாடுகளை ஆளும் அதிபர்களுக்கு. ஆட்சியில் இருக்கும் காலத்தில் சிறப்பான நிர்வாகத்தை அளித்து, மக்களுக்கு நல்லது பல செய்து, நல்ல பேர் எடுத்திருக்க வேண்டும். மிகச் சிறந்த தலைவர் என்று மகாஜனங்கள் ஏகமனதாகச் சொல்லியிருக்கவேண்டும்.
இப்படியாக நல்ல பேரை வாங்கிக்கொண்டு காலக்கிரமத்தில் ரிடையர் ஆகி வீட்டுக்குப் போகும் அதிபர்களிடையே மேற்படி மோ இப்ராஹிம் ஃபவுண்டேஷன் மிகச் சிறந்த ஒருவரைத் தேர்ந்தெடுக்கும். அவருக்குத்தான் அந்த அஞ்சு மில்லியன் டாலர் பரிசு.
இதில் இன்னொரு நிபந்தனையும் உண்டு. இந்த அதிபராகப்பட்டவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவராக இருக்க வேண்டும். தடாலடிப் புரட்சி பண்ணி ஆட்சியைக் கவிழ்த்து நாற்காலியை அபகரிப்பவர்களுக்குப் பந்தியில் இடம் கிடையாது. அதே மாதிரி பதவிக்காலம் என்னவோ, அதை முடித்துவிட்டு சமர்த்துப் பிள்ளையாக அடுத்தத் தேர்தலுக்கும் ஏற்பாடு பண்ணி வைத்தவராயிருக்க வேண்டும்.
சே. எத்தனை கஷ்டமான நிபந்தனைகள். இருந்தாலும் வேறு வழியில்லை. டாக்டர் மோ இப்ராஹிம் அப்படித்தான் சொல்லியிருக்கிறார். அவரே ஒன்றும் பரிசுக்குரியவரைத் தேர்ந்தெடுப்பதில்லை. தகுதி வாய்ந்த பெருந்தலைவர்களைக் கொண்ட கமிட்டி ஒன்றை அவர் வைத்திருக்கிறார். அந்த கமிட்டிதான் விருதுக்குரியவர்களைத் தேர்ந்தெடுக்கும்.
இந்த கமிட்டி கொடுக்கும் விருது ஒரு பக்கம் இருக்க, உள்ளதிலேயே (53 உள்ளது) பெஸ்டு, ரெண்டாமிடம், மூணாமிடம் என்று தொடங்கி கட்டக்கடைசி தரத்து ஆப்பிரிக்க நாடுகள் வரை வருஷம் தோறும் ஒரு பட்டியல் கொடுக்கும். சுய பரிசீலனைக்கு ரொம்ப சௌகரியமான விஷயம் இது. அதையெல்லாம் யார் கேட்டார்கள் என்றால் பேச்சே இல்லை.
நிற்க. இந்த மோ இப்ராஹிம் கமிட்டியாருக்கு இந்த வருஷ 53 அதிபர்களுள் ஒருத்தர்கூடப் பரிசுக்குத் தேறவில்லை. ஏற்கெனவே மூன்று முறை (2009, 10, 12) இம்மாதிரி ஆகி, பரிசு கிடையாது போ என்று சொல்லிவிட்டது கமிட்டி. இந்த வருஷமும் இப்படி ஆனதில் ஆப்பிரிக்க மக்களுக்கு அது ரொம்ப அவமானமாகப் போய்விட்டது. என்னமாதிரியான தலைவர்கள் நம்மை ஆண்டுகொண்டிருக்கிறார்கள்? இந்த அழகுராஜ் அண்ணன் நல்லவர், வல்லவர் என்று அடுத்தவன் சொல்ல வக்கில்லாத வகையிலா ஒரு ஆட்சி நடக்கும்? வெட்கம், வெட்கம்.
ஆனால் அதிபர்கள் பொருட்படுத்தத் தயாராயில்லை. யாருக்கு வேண்டும் அஞ்சு மில்லியன்? அதற்கு மேலும், அதைவிட மேலும் அள்ளித்தர ஆட்சி இருக்கிறது. அது போதும், போ.
மொரீஷியஸ், போஸ்வானா, கேப் வெர்தெ, சீஷெல்ஸ், தென்னமெரிக்காவெல்லாம் ஒப்பீட்டளவில் ஓரளவு நல்லாட்சி தேசங்கள் என்று சுட்டிக்காட்டியிருக்கும் இக்கமிட்டியானது 53வது ரேங்க்கை சோமாலியாவுக்கு வழங்கியிருக்கிறது. சோமாலியாவில் கடலில் மட்டும் கொள்ளையர்கள் இல்லை என்பது இதன் உள்ளுறை நல்லர்த்தம்.
நமது நல்ல தேசத்தில் உள்ள மாநில முதல்வர்களுக்கிடையே இம்மாதிரி ஒரு போட்டி வைத்து வருஷம் தோறும் ஒரு பட்டியல் போட்டுப் பார்க்கலாம். யார் ஆட்சி நல்லாட்சி? தங்கத் தமிழகம் எத்தனை வருஷம் நம்பர் ஒன்னாக வருகிறது என்று பார்க்கும் ஆவல் இப்போதே தறிகெட்டு எகிறுகிறது.

மறக்கப்பட்ட 1949 வாக்குறுதி

படம்: கே. பாக்கிய பிரகாஷ்
படம்: கே. பாக்கிய பிரகாஷ்
நாட்டின் முதலாவது உள்துறை அமைச்சர் 'இரும்பு மனிதர்' சர்தார் வல்லபபாய் படேலுக்குக் கொடுத்த வாக்குறுதிப்படி, ஆர்.எஸ்.எஸ். (ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக்) இயக்கமானது, தனக்கு அரசியல் அல்லாத கடமைதான் பணிகள் என்று 1949-ல் வகுத்துக்கொண்டது. ஆனால், 2013-ல் அது வெளிப்படையாக மேற்கொண்ட அரசியல் நடவடிக்கையின் மூலம், தான் வகுத்துக்கொண்ட அமைப்பு விதிகளுக்கே முரணாக நடந்துகொண்டிருக்கிறது.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அமைப்பு விதிகளிலேயே, "அரசியல் நடவடிக்கைகளிலிருந்து விலகி இருப்போம்" என்று வெளிப்படையாகக் கூறப்பட்டிருக்கிறது. இதைத் தவிர, வேறு எந்த உறுதிமொழியையும் அதனிடமிருந்து படேல் ஏற்பதற்குத் தயாராக இல்லை என்பதால் வேறுவழியின்றி அத்தகைய உறுதிமொழியை அளித்தது ஆர்.எஸ்.எஸ்.
2013-ல் நடந்துள்ள நிகழ்வுகள் இந்திய வரலாற்றின் பழைய பக்கங்களை அழிக்கும் வகையில் இருக்கிறது. பாரதிய ஜனதாவை ஆர்.எஸ்.எஸ். இப்போது தன்னுடைய முழுக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டது. மக்களவை பொதுத் தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளரை (நரேந்திர மோடி) அறிவிப்பதில் கட்சிக்குள் எழுந்த எதிர்ப்பை அது அடக்கிவிட்டது. இதைவிட வெளிப்படையான அரசியல் நடவடிக்கை வேறு இருக்க முடியாது.
மூத்த ஆலோசகர்
ஆர்.எஸ்.எஸ். என்பது இப்போது பாரதிய ஜனதாவுக்கும் இதற்கு முன்னால் பாரதிய ஜன சங்கத்துக்கும் உற்ற ஆசானாக, வழிகாட்டியாக, ஆலோசனை கூறும் மூத்த குருவாகவே இருந்துவருகிறது. அதன் ஆலோசனையையோ வழிகாட்டுதலையோ ஏற்க முடியாதென்று நிராகரிக்க முடியாத நிலையிலேயே கட்சியும் இருக்கிறது. காரணம், ஜன சங்கக் காலத்திலிருந்து கட்சியின் தலைமைப் பொறுப்புக்கும் நிர்வாகப் பொறுப்புக்கும் தேவைப்பட்ட தலைவர்களை, முழு நேர ஊழியர்களை ஆர்.எஸ்.எஸ்-தான் அனுப்பிவைக்கிறது. கட்சியின் இதயமாகவும் மூளையாகவும் ஆர்.எஸ்.எஸின் தீவிரத் தொண்டர்களே செயல்படுவதால் அதன் ஆலோசனைகளும் கட்டளைகளும் சிந்தனைகளும்தான் கட்சியில் முக்கியத்துவம் பெறுகின்றன. ஆர்.எஸ்.எஸ். தனக்கென்று அரசியல் நடவடிக்கை எதுவும் தேவையில்லை என்று கைவிட்டுவிட்டது. ஆனால், தன்னுடைய தொண்டர்கள் எந்தக் கட்சியிலும் சேர்ந்து பணிபுரிய அது அனுமதிக்கிறது.
அமைப்பு விதிகளில் உள்ள இந்தப் பிரிவை அது பயன்படுத்தி தன்னுடைய இயக்கத் தொண்டர்களை முன்னர் பாரதிய ஜன சங்கத்திலும் இப்போது பாரதிய ஜனதாவிலும் பணிபுரிய வைக்கிறது. லால் கிருஷ்ண அத்வானி முதல் நரேந்திர மோடி வரை அனைத்து முக்கியத் தலைவர்களும் ஆர்.எஸ்.எஸ். 'இதய'த்திலிருந்து கட்சியின் நிர்வாகத்துக்கு நேரடியாக வந்தவர்களே. அப்படி வரும் அவர்கள் கட்சியின் கொள்கைகளையும் திட்டங்களையும் முடிவுசெய்ய நாகபுரியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்துக்கும் தில்லியில் உள்ள தலைமை அலுவலகத்துக்கும் அடிக்கடி 'தீர்த்த யாத்திரை' மேற்கொண்டே தீர வேண்டும்.
பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். உறவில் சொல்லப்படாத விஷயம் ஒன்று என்னவென்றால், ஆர்.எஸ்.எஸ். தலைமைப் பொறுப்பில் இருக்கும் 'சர்சங்கசாலக்'என்ன நினைக்கிறார், என்ன செய்ய வேண்டும் என்று கட்சியிடம் எதிர்பார்க்கிறார் என்று எவருக்கும் தெரியாது. "அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டோம்" என்று படேலுக்கு 1949-ல் அளித்த வாக்குறுதி காரணமாகவும் இந்துத்துவா என்றாலே இயல்பாக ஏற்படும் அரசியல் எதிர்ப்புணர்வு காரணமாகவும் திரைமறைவிலேயே வேலைகள் நடத்தப்படுகின்றன. 1977 - 79, 1998 - 2004 காலங்களில் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவிக்கு வந்ததற்குக் காரணமே, "எவர் கண்ணிலும் படாமல் ஒதுங்கியிருப்போம்" என்று ஆர்.எஸ்.எஸ். ஒப்புக்கொண்டதால்தான். 2013-ல் நடந்திருக்கும் சம்பவங்கள் முக்கியமானவை. பாரதிய ஜனதா ஆட்சிக்கு வர மேலும் பல தோழமைக் கட்சிகள் தேவைப்படுகின்றன. தோழமைக் கட்சிகள் வேண்டும் என்றால், ஆர்.எஸ்.எஸ். பங்கு குறைவாகவோ கண் மறைவாகவோ இருக்க வேண்டும். ஆனால், முன்னெப்போதும் இல்லாததைவிட இந்த முறை கண்ணுக்குத் தெரியும் வகையில் வெளிப்பட்டதோடல்லாமல் கட்டளையிடும் தொனியிலேயே பேசியிருக்கிறார் 'சர்சங்கசாலக்'.
2005-லேயே கட்சியின் பொறுப்புகளை நேரடியாகக் கையில் எடுத்துக்கொள்ள ஆர்.எஸ்.எஸ். தயாராகிவிட்டது. பாகிஸ்தானுக்குச் சென்ற அத்வானி அங்கு முகம்மது அலி ஜின்னாவின் நினைவிடத்தில் அவரைப் புகழ்ந்து பேசிவிட்டார். உடனே கோபத்தில் கொதித்தெழுந்த ஆர்.எஸ்.எஸ். தலைமை, அத்வானியைக் கட்சிப் பதவியிலிருந்து கீழிறக்கியது. 2009 மக்களவை பொதுத் தேர்தலின்போது கூட்டணியின் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அத்வானி அறிவிக்கப்பட்டபோதிலும் ஆர்.எஸ்.எஸ். அவருக்கு அளித்திருந்த இடத்திலிருந்து அவரை இறக்கியதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இப்போதோ அவர் அப்பட்டமாகத் தனிமைப்படுத்தப்பட்டுவிட்டார்.
2005-ல் ஆர்.எஸ்.எஸ். பதவியிறக்கிய அத்வானி, 2005 செப்டம்பரில் சென்னையில் நடந்த கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் பேசுகையில், "ஆர்.எஸ்.எஸ். ஆலோசனை கலக்காமல் கட்சியால் எந்தவித முக்கிய முடிவையும் எடுக்க முடியாது என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டது. இப்படி மற்றவர்கள் நினைப்பது கட்சிக்கோ ஆர்.எஸ்.எஸுக்கோ நன்மையைத் தராது. நல்ல மனிதர்களையும் தேசத்தையும் உருவாக்க வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ். இயக்கம் சுருங்கிவிட இது வழிவகுக்கும். இந்த எண்ணம் மறைய ஆர்.எஸ்.எஸ்., பாரதிய ஜனதா இரண்டுமே அந்த வழியில் செயல்பட வேண்டும்" என்றார்.
சங்கத் தலைமையோடு பல தலைவர்கள் மோதி மூக்குடைபட்டுச் சென்றுள்ளனர். ஆனால், அத்வானியோ ஒருகாலத்தில் அந்த அமைப்பின் செல்லப்பிள்ளை. ஜன சங்கத்தை வளர்க்கும் பணிக்காக சங்கத் தலைமையால் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டவர். ஆர்.எஸ்.எஸ். என்பது அடுத்தவர்கள் விவகாரத்தில் மூக்கை நுழைக்கிறது என்று அத்வானி பின்னர் பட்டவர்த்தனமாகவே சொல்ல நேர்ந்துவிட்டது, அது உண்மையும்கூட. அதேசமயம் அத்வானி போன்ற மூத்த தலைவரை, நெடிய அரசியல் அனுபவம் மிக்கவரை கட்சியின் முக்கியப் பொறுப்புகளிலிருந்து விலக்கியிருப்பதுதான் அதுவரை நடந்திராதது.
ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு ஆர்.எஸ்.எஸ். இப்போது மீண்டும் கட்சியின் உள்விவகாரத்தில் தலையிட்டிருக்கிறது. அதுவும் ஒரு தலைவருக்கு இரட்டைப் பதவி உயர்வு அளிப்பதற்கு. 2013 ஜூனில் பாரதிய ஜனதா தேர்தல் பிரசாரக் குழுத் தலைவராக நரேந்திர மோடி தேர்வுசெய்யப்பட்டார். 2013 செப்டம்பரில் பிரதமர் பதவிக்கான வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுவிட்டார். 2005-லாவது ஆர்.எஸ்.எஸ். தலைமைதான் அத்வானியைப் பிரதமர் வேட்பாளராகத் தேர்வுசெய்தது என்பதை அவரே சொல்ல உணர்ந்துகொண்டோம். இப்போதோ அதையும் தூர வீசிவிட்டு, மோடிதான் பிரதமர் பதவிக்கான எங்களுடைய வேட்பாளர் என்று ஆர்.எஸ்.எஸ். வெளிப்படையாகவே தெரிவித்துவிட்டது.
கட்சியின் தேர்தல் பிரசாரக் குழுத் தலைவராக மோடி நியமிக்கப்பட்டதை எதிர்த்து கட்சிப் பதவிகளிலிருந்து விலகுவதாக அறிவித்த அத்வானி, ஆர்.எஸ்.எஸ். தலைமையின் கட்டளைகளுக்கேற்ப அந்த எதிர்ப்பைத் திரும்பப் பெற்றார். இதைக் கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் வெளிப்படையாகவே தெரிவித்தார். ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. வரலாற்றில் இப்படி நடப்பது இதுவே முதல்முறை.
"ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், அத்வானியுடன் பேசினார், ''பாரதிய ஜனதா ஆட்சிமன்றக் குழு எடுத்த முடிவை மதியுங்கள், தேசிய நலனில் அக்கறைகொண்டு கட்சியைத் தொடர்ந்து வழிநடத்துங்கள் என்று கோரினார்" என்று ராஜ்நாத் சிங் 2013 ஜூன் 11-ம் தேதி பத்திரிகைகளுக்கு அறிக்கை மூலம் தெரிவித்தார். கட்சியின் ஆட்சிமன்றக் குழு அத்வானிக்கு 'வேண்டுகோள்'தான் விடுத்தது. ஆர்.எஸ்.எஸ். தலைவரோ 'கட்டளை'யே பிறப்பித்தார். வார்த்தைகள் நளினமாக இருந்தன. ஆனால், அவற்றிலிருந்த கண்டிப்பு அப்படிப்பட்டதல்ல.
கட்சியின் தலைமைப் பொறுப்பை ஆர்.எஸ்.எஸ். ஏற்பது 2005-ல் தொடங்கி 2013 செப்டம்பரில் நிறைவுற்றது. பிரச்சாரக் குழுத் தலைவராக மோடியை நியமிக்கக் கூடாது என்று அத்வானி 2013 ஜூனில் வலியுறுத்தினார். ஆனால், அவர்தான் தலைவராக நியமிக்கப்பட்டார். கட்சிக்குள் மோடிக்கு எதிராக இருந்த எதிர்ப்பாளர்களைக் களைப்படையவைக்கும் உத்தி இது.
அரசியல் எமது வேலையல்ல
ஆர்.எஸ்.எஸ். கலாச்சாரப் பணியில்தான் ஈடுபடும்… அரசியலில் ஈடுபடாது என்று ஆர்.எஸ்.எஸ். தனது அமைப்பு விதியிலேயே வரையறுத்து 1949-ல் படேலிடம் அளித்தது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு விதியின் 4 (பி) பிரிவு இதைத் தெரிவிக்கிறது. 1948-ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு, ஆர்.எஸ்.எஸ். மீது விதிக்கப்பட்ட தடையை விலக்க, படேல் இதை நிபந்தனையாகவே விதித்தார்.
காந்திஜியின் படுகொலையில் தங்களுடைய இயக்கத்துக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அப்போதைய 'சர்சங்கசாலக்'மாதவ சதாசிவ கோல்வால்கர் மன்றாடினார். அந்தப் படுகொலையில் ஆர்.எஸ்.எஸ். ஈடுபடவில்லை என்பதில் படேலும் தெளிவோடு இருந்தார். அதை 1948 பிப்ரவரி 4-ல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அதே கருத்தைப் பின்னரும் வலியுறுத்தியிருக்கிறார். ஆனால், சங்கத்தின் வன்முறை சார்ந்த வழிமுறைகள்தான் காந்திஜி படுகொலை செய்யப்படுவதற்கான சூழலை உருவாக்கிவிட்டது என்பதில் உறுதியாக இருந்தார். காந்திஜி படுகொலை தங்களுக்கு அதிர்ச்சியை அளித்தது என்று பிரதமர் நேருவுக்கும் உள்துறை அமைச்சர் படேலுக்கும் கோல்வால்கர் தந்திகள் அனுப்பியிருந்தாலும், அந்த அமைப்பின் மீதான கோபத்தைத் தணிக்க அது எந்த வகையிலும் உதவவில்லை.
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைத் தடைசெய்து 1948 பிப்ரவரி 4-ல் வெளியான அரசு அறிக்கையிலும், காந்திஜியின் படுகொலைக்கு ஆர்.எஸ்.எஸ்-தான் காரணம் என்று கூறப்படவில்லை. "ஆர்.எஸ்.எஸ். இந்துக்களிடையே ஒற்றுமையை வளர்ப்பதுதான் தங்களுடைய நோக்கம் என்று கூறுகிறது. ஆனால், நடைமுறையில் அந்த இயக்கத்தவர் அப்படி நடந்துகொள்ளவில்லை. விரும்பத்தகாத, அதேசமயம் பயங்கரமான சில நடவடிக்கைகளில் அந்த அமைப்பின் உறுப்பினர்கள் தனிப்பட்ட முறையில் ஈடுபட்டுள்ளனர். பொதுச் சொத்துக்களுக்குத் தீயிடல், சேதப்படுத்துதல், கொள்ளை போன்ற சம்பவங்களில் அவர்களுக்குத் தொடர்பிருப்பது தெரியவருகிறது. சட்ட விரோதமாக ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும், குண்டுகளையும் அவர்கள் சேகரித்துள்ளனர். அரசுக்கு எதிராகப் பயங்கரவாதச் செயல்பாடுகளில் ஈடுபடுமாறும் ஆயுதங்களைச் சேகரிக்குமாறும் அரசுக்கு எதிரான வெறுப்புணர்வைத் தூண்டிவிடுமாறும் காவல் துறை – ராணுவம் ஆகியவற்றுக்குக் கட்டுப்பட மறுக்குமாறும்கூட அவர்கள் கூறுகின்றனர். அவர்களுடைய செயல்பாடுகள் ரகசியமாகவே உள்ளன" என்று அரசு வெளியிட்ட தடை நடவடிக்கையில் காரணங்கள் விளக்கப்பட்டுள்ளன.
ஆர்.எஸ்.எஸ். தன்னைத் திருத்திக்கொள்ள வேண்டும் என்ற அரசின் அறிவுரையை ஏற்காமலேயே, தங்கள் மீதான தடையை அரசு விலக்க வேண்டும் என்று கோல்வால்கர் விரும்புகிறார் என்று படேல் தலைமையிலான உள்துறை அமைச்சகம் 1948 நவம்பர் 14-ல் அறிக்கை வெளியிட்டது. அத்துடன் அந்த அமைப்பு தேச விரோதமாகவும் சட்டத்தைச் சீர்குலைக்கும் வகையில் வன்முறைப் பாதையிலும் கடந்த காலங்களில் இருந்ததைப் போல தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தும் சம்பவங்களுக்கு இட்டுச் செல்லும் வகையிலும் செயல்படுவதாகப் பல்வேறு மாகாண அரசுகளிலிருந்து தங்களுக்கு அறிக்கைகள் வருவதாகவும் அது தெரிவித்தது.
இரு கடிதங்கள்:
இதற்கும் முன்னதாக, படேல் இரு கடிதங்களை எழுதினார். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கு ஆதரவாக சியாமா பிரசாத் முகர்ஜி முன்வைத்த வாதங்களை நிராகரித்து ஒரு கடிதம் எழுதினார். "ஆர்.எஸ்.எஸ். நடவடிக்கைகள் அரசுக்கும் தேசத்துக்கும் அச்சுறுத்தலாகவே உள்ளன. காலம் செல்லச் செல்ல ஆர்.எஸ்.எஸ். அரசின் ஆணைக்குக் கட்டுப்பட மறுக்கும் அமைப்பாகவே இருக்கிறது, நாட்டைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் முன்னெப்போதையும்விட அதிகமாகவே ஈடுபடுகிறது" என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.
1948 செப்டம்பர் 11-ல் கோல்வால்கருக்கே ஒரு கடிதம் எழுதினார். இந்து சமுதாயத்துக்காக ஆர்.எஸ்.எஸ். ஆற்றிவரும் தொண்டுகளைப் பாராட்டினாலும் அதன் ஆட்சேபிக்கத்தக்க செயல்பாடுகளைப் பட்டியலிட்டார். வெறுப்புணர்வு பொங்க முஸ்லிம்களை அவர்கள் தாக்குவதையும் இந்த வகுப்புவாத வெறியின் உச்சகட்டமாக மகாத்மாவையே நாம் பலிகொடுக்க நேரிட்டதையும் காந்திஜியின் மரணச் செய்தியைக் கேட்டவுடன் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதுடன் மக்களுக்கு இனிப்புகளை வழங்கியதையும் படேல் அதில் சுட்டிக்காட்டினார். காந்திஜியைக் கொல்லக் காரணமாக இருந்தார்கள் என்பதற்காக ஆர்.எஸ்.எஸ். மீது தடை விதிக்கப்படவில்லை; வன்முறையை வளர்த்தது, அரசின் ஆணைகளுக்குக் கட்டுப்பட மறுத்து அதைச் சீர்குலைக்க முயன்றது ஆகிய குற்றங்களுக்காகத்தான் தடை விதிக்கப்படுகிறது என்பதை அதில் அவர் விவரித்திருந்தார் (காந்திஜியின் படுகொலையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று அரசு பின்னர் முறையாகவே அறிவித்தது.)
இதற்குப் பிறகே, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மீதான தடையை விலக்க சில முக்கிய நிபந்தனைகளை படேல் விதித்தார். "இந்திய தேசியக் கொடியை மதிப்போம், வெளிப்படையாகச் செயல்படுவோம், அமைதியான வழிமுறைகளிலேயே ஈடுபடுவோம், அரசியல் நடவடிக்கைகளிலிருந்து விலகி நிற்போம்" என்பது அந்த நிபந்தனைகளில் சில. (ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தன்னுடைய இயக்கக் கொடியையே குருவாக மதிக்கிறது, அந்தக் கொடியை மட்டுமே தன்னுடைய அலுவலகங்களில் ஏற்றுகிறது). தங்களுடைய அமைப்புக்கு எழுத்துப்பூர்வமான அமைப்பு விதிகளை ஏற்படுத்த ஆர்.எஸ்.எஸ். தலைமை மறுத்தது. அரசுக்கும் அதற்கும் இடையில் நீண்ட போராட்டம் நடந்தது. முடிவில் படேல் வென்றார். இதன் பிறகே 1949 ஜூலை 11-ல் ஆர்.எஸ்.எஸ். மீதான தடை விலக்கப்பட்டது. அன்று 'அரசியலிலிருந்து விலகி நிற்போம்'என்று படேலுக்கு அளித்த வாக்குறுதியிலிருந்து ஆர்.எஸ்.எஸ். இப்போது பின்வாங்கிவிட்டது.

பேரிடர்! மேலாண்மை?

ஒரே வாரத்தில் இரண்டு பேரிடர்கள். மத்தியப் பிரதேச ரத்னாகர் கோயில் திருவிழாக் கூட்ட நெரிசலில் நூற்றுக் கணக்கானோர் மிதிபட்டு இறந்திருக்கின்றனர். ஒடிசா, ஆந்திர மாநிலங்களைத் தாக்கிய புயலின் விளைவாக லட்சக் கணக்கான மக்கள் அகதிகளாகியிருக்கின்றனர்.
வறுமையிலும் விரக்தியிலும் பெரும் மக்கள்தொகையினர் வாழும் நம் நாட்டில், ஏழைகளின் உயிருக்கான மதிப்பு எப்போதும் குறைவானதுதான். அதனால்தான் பெரிதும் ஏழைகளே பாதிப்புக்குள்ளாகும் பேரிடர் நிகழ்வுகள் எல்லாவற்றிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் உடனடி நிவாரணப் பணிகளும் போதுமான அளவில் இல்லை.
இதற்கென்றே சிறப்புச் சட்டங்களையெல்லாம் இயற்றி, நிதி அமைப்புகளையெல்லாம் ஏற்படுத்திவிட்ட தாகச் செய்திக் குறிப்புகளில் மத்திய அரசும் மாநில அரசுகளும் சொல்லிக்கொள்ளலாம். ஆனால், நடைமுறையில் அவை ஏட்டளவில் மட்டுமே இருக்கின்றன என்பதைச் சென்ற வருடம் மார்ச்சில் வெளியான தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை அம்பலப்படுத்தியது. இந்த அறிக்கை ஏப்ரல் 2012-ல் அவையில் வைக்கப்பட்டது. ஆனால், அதன் மீது எந்த விவாதமும் நடந்ததாகத் தெரியவில்லை.
பிரதமர் தலைமையில் அமைக்கப்பட்ட தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் ஓய்வுபெற்ற அதிகாரிகள்தான் உறுப்பினர்கள். எப்போதாவது டெல்லியின் நட்சத்திர விடுதிகளில் பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்தி அறிக்கை வெளியிடுவதுதான் இதுவரை இந்த அமைப்பின் பகிரங்கமான நடவடிக்கை. “2008-ல் அமைக்கப்பட்டதிலிருந்து 2012 வரை இந்த ஆணையத்தின் தேசிய செயற்குழு ஒரு முறைகூடக் கூடியதில்லை” என்கிறார் தணிக்கை அதிகாரி.
இந்த அமைப்புதான் தேசத்தில் ஏற்படக் கூடிய இயற்கைப் பேரழிவுகள் முதல், உயிரியல், ரசாயன, அணுக் கதிரியக்கம் முதலான எல்லா வகைப் பேரழிவுகளையும் சமாளிக்க வழிமுறைகளையும் நடவடிக்கை களையும் செய்ய வேண்டிய அமைப்பு. இது உருவாக்க உத்தரவிட்ட எந்தத் திட்டமும் முழுமையாக நிறைவேற்றப்படவே யில்லை. எந்தத் திட்டத்துக்கும் காலவரையறைகூட நிர்ணயிக்கப்படவில்லை என்கிறார் தணிக்கை அதிகாரி.
தேசிய அமைப்பின் கீழ் ஒவ்வொரு மாநிலத்திலும் பேரிடர் மேலாண்மை ஆணையங்கள் ஏற்படுத்த வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் பீகார், குஜராத், ஒடிசா உட்பட ஏழு மாநிலங்களைத் தவிர,வேறு எந்த மாநிலத்திலும் இந்த ஆணையம்கூட அமைக்கப்படவில்லை என்கிறது தணிக்கை அறிக்கை. எல்லா மாநிலங்களிலும் பேரிடர் வந்தால் அதைச் சமாளிப்பதற்கான தனிப் படை அமைக்கப்பட வேண்டும் என்பது சட்டம். இதை ஒரு மாநிலம்கூடச் செய்யவில்லை.
தணிக்கை அறிக்கை வந்து ஒரு வருடம் ஆகியும் எந்த நடவடிக்கையும் இல்லாத நிலையில், சென்ற மாதம் உச்ச நீதிமன்றத்தில், தொண்டு நிறுவனங்களால் ஒரு பொது நல வழக்கு போடப்பட்டது. இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம் மத்திய அரசு, உத்தராகண்ட், ஆந்திரம், குஜராத், ஒடிசா, மகாராஷ்டிரம், ராஜஸ்தான் மேற்கு வங்கம் , தமிழகம் ஆகிய மாநில அரசுகள், தேசிய ஆணையம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.
ரத்னாகர் கோயில் திருவிழாவும் சரி, ஒடிசாவைத் தாக்கிய புயலும் சரி, போதுமான முன்னறிவிப்பு இல்லாமல் நடக்கவில்லை. கோயில் திருவிழாக்கள் ஆண்டுதோறும் நடப்பவை. ஒவ்வோராண்டும் எத்தனை பேர் கூடுகிறார்கள் என்பது நிர்வாகத்துக்குத் தெரியும். இந்த வருடமும் வரப்போகும் பக்தர்களுக்குப் போதுமான வசதிகளைப் பல வாரங்கள் முன்பாகவே தயார் செய்திருக்க முடியும். புயலோ, ஆந்திரத்தையும் ஒடிசாவையும் போய்த் தாக்கி கரையைக் கடப்பதற்கு மூன்று நாட்கள் முன்னதாகவே அந்தத் திசையில்தான் செல்லும் என்பதை வானிலை ஆய்வு நிலையம் துல்லியமாகச் சொல்லியிருக்கிறது. எனவே, மக்களை வெளியேற்றி, பொருட்களைப் பாதுகாக்கப் போதுமான கால அவகாசம் இருந்தது. ஆனால், இந்த வேலைகளைச் செய்யப் பயிற்சி பெற்ற ஊழியர்களோ, பிரத்தியேக அமைப்போ, அரசு வசம் தயார் நிலையில் இல்லை. அதை ஏற்படுத்தி வைப்பதுதான் தேசிய ஆணையத்தின் பணி என்கிறது சட்டம்.
இயற்கைப் பேரழிவுகளில் உயிரிழப்புக்குக் காரணம் இயற்கை அல்ல, மனிதன்தான். கட்டடங்களைக் கட்டும் முறை, பராமரிக்கும் விதம், முன்னெச்சரிக்கை நடவடிக்கையின்மை எல்லாம்தான் இழப்புகளை ஏற்படுத்துகின்றன. பீகாரில் 2008-ல் ஏற்பட்ட வெள்ளத்தில் 250 சாவுகள். 30 லட்சம் பேர் வீடிழந்தனர். அதேசமயத்தில், அமெரிக்காவில் 24 மாநிலங்கள் பாதிக்கப்பட்ட புயலில், மொத்தம் 147 சாவுகள்தான். வீடிழந்தோர் எண்ணிக்கை வெறும் 30 ஆயிரம். நம் நாட்டின் நெரிசலான மக்கள் தொகையை மனதில் கொண்டு நாம் நமது சிற்றூர்களையும் நகரங்களையும் திட்டமிட்டு வடிவமைக்கவே இல்லை. கட்டடக் கட்டுமானங்களிலோ எங்கும் விதிமீறல்கள்.
டெல்லி, சென்னை, மும்பை போன்ற நகரங்களில் நில அதிர்ச்சியோ, அணுக் கதிரியக்க வீச்சோ ஏற்பட்டு பெரும் அழிவு ஏற்பட்டால், அதை நிர்வகிக்க நம்மிடம் எந்த ஏற்பாடும் ஒழுங்காக இல்லை. சில வருடங்களுக்கு முன்னர் கல்பாக்கம் அணு உலையில் நடத்திய ஒத்திகையின்போது, மக்களை அப்புறப்படுத்தக் கொண்டுவந்த பஸ்கள் பிரேக் டவுன் ஆகிவிட்டன. ஒத்திகை நடப்பதே அரசின் பல துறைகளுக்குத் தெரியாது. ஒத்திகைக்காக ஏற்படுத்தப்பட்ட கண்ட்ரோல் அறையில் போன் வேலை செய்யவில்லை. சென்ற வருடம் கூடங்குளத்தில் பேரிடர் ஏற்பட்டால் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று சுற்றியிருக்கும் எல்லா கிராம மக்களுக்கும் அறிவுறுத்தப்போகிறோம் என்று சொல்லிக் கொண்டு, ஒரே ஒரு கிராமத்துக்குப் போய் அங்கிருந்த 50 பேரிடம் ஒப்புக்கு ஒரு கூட்டம் நடத்திவிட்டு, மக்களுக்கு விழிப்புணர்வு கொடுத்தாகிவிட்டது என்று நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துவிட்டார்கள்.
இன்னொரு பக்கம், கதிர்வீச்சுப் பேரிடர் ஏற்பட்டால், ‘என்ன செய்யத் திட்டம்?’ என்று தான் தலைவராக இருக்கும் அமைப்பிடமே பிரதமர் கேள்வி எழுப்பினார். தன்னிடம் என்ன திட்டம் இருக்கிறது என்று இதுவரை விரிவான தகவல் எதையும் அந்த ஆணையம் நீதிமன்றத்திலோ மக்கள் மன்றத்திலோ சொல்லவே இல்லை. இப்படிப்பட்ட சூழலில் சென்னையிலோ, மும்பையிலோ ஏதேனும் பேரிடர் ஏற்பட்டால், என்னாகும்? கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று சொல்லத் தோன்றுகிறதா? கடவுளுக்கே இந்திய அரசிடம் உத்தரவாதம் இல்லை என்கிறது உத்தராகண்டில் வெள்ளத்தில் மிதந்து சென்ற சிவன் சிலை!

விக்கல் ஏன் வருகிறது?

திடீரென விக்கல் வருகிறது. தண்ணீர் குடித்ததும் காணாமல் போகிறது. அது எப்படி என்று யோசித்திருக்கிறீர்களா?
“இந்த விக்கல், தும்மல், கொட்டாவி, பசி, பட்டினி, தூக்கம்... இதெல்லாம் எப்போ வரும்னு தெரியாது. வந்தாலும் ஏன்னு கேட்க முடியாது” என்று முத்து படத்தில் ரஜினி வசனம் பேசியது போல, விக்கல் எப்போது வரும் என்று யூகிக்க முடியாது. நம் உடலில் வயிற்றையும், மார்பையும் இணைக்கும் பகுதிக்கு உதரவிதானம் என்று பெயர். இந்தப் பகுதியில் ‘ப்ரெனிக் நெர்வ்ஸ்’ (Phernic nerves) என்ற நரம்புகள் உள்ளன. இதேபோல ‘டயாஃப்ரம்’ (Diaphragm) என்ற தோல் போன்ற ஒரு தசையும் நம் மார்பக பகுதியில் உள்ளது.
ப்ரெனிக்ஸ் நரம்புகளில் திடீரென்று ஏற்படும் ஒருவித ‘எரிச்சல்’ (irritation) காரணமாக டயாஃப்ரம் திடீரென்று வேகமாகச் சுருங்கும். அப்போது அதிகப்படியான காற்று நுரையீரலுக்குள் செல்கிறது. இதனால் டயாஃப்ரம் தசை இழுத்துக்கொள்கிறது. இதன் காரணமாக ஏற்படுவதே விக்..விக்.. என்ற ஓசையுடன் நாம் உணரும் விக்கல்.
விக்கலை நிறுத்த தண்ணீரையோ ஒரு பிடி உணவையோ விழுங்கும்போது மேற்சொன்ன செயல்பாட்டில் தடங்கல் (Distraction) ஏற்பட்டு ப்ரெனிக்ஸ் நரம்புகள் இயல்பு நிலைக்குத் திரும்புவதால் விக்கல் நின்றுவிடுகிறது.

துளி...துளி...

#ஒரு நாளுக்கு எத்தனை மணிநேரம்னு கேட்டால் எல்லோரும் 24 மணி நேரம்னு சொல்வோம். உண்மையில் ஒருநாள் என்பது 23 மணி நேரம், 56 நிமிடங்கள், 4 நொடிகள் மட்டுமே!
#விண்வெளியில் ஆக்ஸிஜன் இல்லாததால அங்கே உயிர்வாழ முடியாதுன்னு உங்களுக்குத் தெரியும். ஆனால் விண்வெளியில் உயிர் காக்கும் உபகரணங்கள் இன்றி 2 நிமிடங்கள் வாழ முடியுமாம்.
#காந்தியடிகள் விமானத்தில் பயணம் செய்ததே இல்லை. பிரிட்டனுக்கும், தென்ஆப்பிரிக்காவுக்கும் கப்பலில்தான் பயணித்திருக்கிறார்.
#பாலைவனம்னாலே கண்ணுக்கு எட்டின தூரம் வரைக்கும் மணல்தானே இருக்கும். ஆனால் பெரு நாட்டில் உள்ள செச்சுரா பாலைவனத்தில் மணலே இல்லை. மலை மேடு போலவே காட்சியளிக்கும்.
#ஊர் பெயர்களை மனிதர்களுக்கு வைப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் உள்ள ஒரு நகரத்துக்கு விலங்கின் பெயரைச் சூட்டியிருக்கிறார்கள். அந்த ஊரின் பெயரைக் கேட்டாலே சும்மா அதிருதாம். அப்படி என்ன பெயரா? டைனோசர்!
#நாலா பக்கமும் கையை, காலை நீட்டிக்கிட்டு பார்க்கறதுக்கு அவ்

ஜோஜியும் பூனைகளும்

ஜோஜி குட்டிக்குப் பாடம் படிப்பதைவிட படம் வரைவது ரொம்பப் பிடிக்கும். அதுவும் பூனைகள் வரைவது என்றால் ரொம்ப ரொம்பப் பிடிக்கும். எப்போதும் பூனைகளைத்தான் வரைந்துகொண்டிருப்பான். சின்ன பூனை, பெரிய பூனை, குண்டு பூனை என அவனைச் சுற்றி எல்லாமே பூனைகள்தான்.
அன்றும் அப்படித்தான். வகுப்பறையில் பாடத்தை கவனிக்காமல் பூனை வரைந்துகொண்டிருந்தான் ஜோஜி. கோபமடைந்த ஆசிரியர் ஜோஜியின் அப்பாவை வரவழைத்தார். அவனைப் பற்றி புகார் சொன்னார். ஜோஜியின் அப்பா அவனைப் பள்ளியை விட்டு நிறுத்தினார். அவருக்குத் தெரிந்த விவசாய நண்பரிடம் அவனை வேலைக்கு அனுப்பினார்.
அங்கேயும் ஜோஜி பூனைகளை விடவில்லை. வயலில் கீழே கிடந்த குச்சியை எடுத்துத் தரையில் பூனைகளை வரைந்தான். விவசாயிக்குக் கோபம் வந்தது. ஜோஜியை இனிமேல் வேலைக்கு வர வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.
கவலையுடன் வீட்டுக்கு வந்த ஜோஜியை புத்த மடத்தில் சேர்த்தார் அவனது அப்பா. அங்கேயும் சுவர் முழுக்க பூனைகளை வரைந்தான் ஜோஜி. பொறுமையிழந்த மடத்தலைவர், ஜோஜியை அழைத்தார். “நீ திருந்தணும்னுதான் உங்கப்பா இங்க அனுப்பினார். ஆனா நீ திருந்தறா மாதிரி தெரியலையே. இனிமே உனக்கு இங்க இடமில்ல” என்று சொல்லி அவனை வெளியே அனுப்பிவிட்டார்.
ஜோஜிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. சோர்வுடன் மடத்தை விட்டுக் கிளம்பினான். களைப்பாக இருந்ததால் வழியில் இருந்த பாழடைந்த புத்த விகாரையில் இரவு தங்கிவிட்டுப் பிறகு வீட்டுக்குச் செல்லலாம் என நினைத்தான். அங்கேயும் பூனைகள் அவனை விடவில்லை. அங்கிருந்த திரைச்சீலைகளில் கரித்துண்டால் பூனைகளை வரைந்தான். பிறகு சிறிய மேடையில் ஏறிப் படுத்துக்கொண்டான். நள்ளிரவில் யாரோ தட்டுமுட்டு சாமான்களை உருட்டும் சத்தமும் கேட்டது. கண்ணை இறுக்கமாக மூடிக்கொண்டு தூங்கினான் ஜோஜி.
மறுநாள் காலை கண் விழித்தபோது அந்த புத்த விகாரைக்குள் பெரிய எலி ஒன்று இறந்து கிடந்தது. அதைப் பார்த்த ஜோஜிக்கு அதிர்ச்சி. எலி இறந்த செய்தி ஊர் முழுவதும் பரவியது. அனைவரும் இறந்துபோன எலியைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தார்கள். காரணம் இத்தனை நாட்களாக அவர்களது வயலை நாசம் செய்த எலிதான் அது. எலி எப்படி இறந்தது என ஜோஜியிடம் கேட்டார்கள். தனக்கு எதுவும் தெரியாது என்றான். அப்போதுதான் அவன் வரைந்த பூனை ஓவியத்தைக் கிராம மக்கள் பார்த்தனர். அதில் ஒரு பூனை மட்டும் ஜோஜி வரைந்த இடத்தில் இருந்து திசை மாறி அமர்ந்திருந்தது. அந்த அதிசயத்தைக் கண்ட மக்கள் ஜோஜியைக் கொண்டாடினார்கள். அவனுடைய பூனைகளையும் பாராட்டினார்கள்.
ஜோஜிக்கு எதுவுமே புரியவில்லை. ஆனால் அவனுக்கு ஒரே மகிழ்ச்சி. தன்னுடைய பூனைகளை மற்றவர்கள் பாராட்டுவதை இப்போதுதான் பார்க்கிறான்.
ஜோஜி இப்போதும் சின்ன பூனை, பெரிய பூனை, குண்டு பூனைகளை வரைந்துகொண்டிருக்கிறான்.

கொசுக்கள் ஏன் சிலரை மட்டுமே அதிகமாகக் கடிக்கின்றன?

சாதாரணமாக நம்மைக் கடிப்பது பெண் கொசுக்கள்தான். அவை யாரைக் கடிக்க வேண்டும் என்பதைப் பார்வை, மோப்ப சக்தி மூலம் கண்டறிகின்றன. அவற்றின் உணர்கொம்புகள் மூலம் 72 வகையான மணங்களை உள்வாங்கிக்கொள்ள முடியும். இந்த 72 வகையான மணங்களில் 27 வேதிப்பொருள்கள் நமது வியர்வையில் இருப்பவை. நமது வியர்வையில் இருக்கும் அப்படிப்பட்ட வேதிப் பொருள்களில் கார்பன் டை ஆக்சைடு, ஆக்டனால், நோனனால் போன்றவை அடங்கும். ஒருவரது வியர்வையில் இந்த வேதிப்பொருள்களின் அடர்த்தி அதிகமாக இருந்தால், கொசுக்கள் அவர்களைக் குறி வைத்துக் கடிக்கின்றன. எனவே, இனிமேல் கொசு உங்களை அதிகமாகக் கடித்தால், அதற்குக் காரணம் என்ன என்று தேடாதீர்கள். எல்லாம் உங்கள் வியர்வையில் இருக்கிறது. வியர்வை வருவதை நம்மால் தடுத்து நிறுத்த முடியாது என்பதால், தற்போது மேலே சொன்ன வேதிப்பொருள்கள் வெளியே தெரியாத வண்ணம் மறைக்கும் வகையில் பூச்சித் தடுப்பு மருந்துகளை கண்டுபிடிப்பது பற்றி ஆராய்ச்சி நடந்துவருகிறது. சீக்கிரம் கண்டுபிடித்தால், கொசுக் கடியில் இருந்து நாமும் சீக்கிரமாகத் தப்பிக்கலாம்.