Tuesday, October 15, 2013

மனம் என்றுமே ஒரு சிறு குழந்தை தான். அதில் எதிர்பார்ப்புகள் அதிகம். ஏமாற்றங்களும் அதிகம். நினைத்தது நடக்காத பட்சத்தில் தன்னையே நொந்துகொள்ளும் ஒரு வினோத குழந்தை அது. அந்தக் குழந்தை உறங்கி விட்டதால் தானும் நிம்மதியோடு உறங்கிக்கொண்டிருந்தான் வசந்தன். உறக்கத்தில் மட்டுமே ஒருவன் நிம்மதியாக இருக்க முடியும். அதில் தூய்மையும் கலந்திருக்கும்.



நதியின் ஓரத்தில் உறங்கிக்கொண்டிருந்த வசந்தனை ஒரு பெண்ணின் கொலுசு எழுப்பிய ஒலி எழுப்பியது. தன் கண்களைத் திறந்து பட்டாம்பூச்சி போல இமைகளைச் சிறகடித்து யாரென்று பார்த்தான். ஷோபனா நின்றுகொண்டிருந்தாள். முந்தின நாள் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் அவனுக்கு நினைவில் வந்தன.



"மன்னிக்கவும்! சிறிது களைப்பு. உறங்கிவிட்டேன்" என்று படபடப்போடு எழுந்தான்.



"வெகு தூரம் நடந்தால் களைப்பு வரத்தானே செய்யும்" என்றாள் ஷோபனா.



அதற்கு ஒரு சிறு சிரிப்பை மட்டும் விடையாக்கினான் வசந்தன். அவன் கண்கள் அவள் மீதும் அவள் கைகளில் இருந்த குழந்தையின் மீதும் மேய்ந்தன. பிறகு, கண்கள் வானை நோக்கின. கரும்புயல் மறைந்திருந்தது. வானில் ஒரு தெளிவு பிறந்து நட்சத்திரங்கள் மலர்களைப் போல் பூத்துக் குலுங்கி கண்சிமிட்டிக்கொண்டிருந்தன.



"புயல் ஓய்ந்துவிட்டதா?" என்றான் அவன். அதில் சிறிது வருத்தமும் கலந்திருந்தது. காரணம், ஷோபனா இப்பொழுது பிரியப்போகிறாள் என்ற உண்மை.



"ஆம்! நான் கிளம்பும் நேரமும் வந்துவிட்டது. நேற்று நீங்கள் எனக்குச் செய்த உதவிக்கு எனது நன்றி"



அவள் கூறிய நன்றி வசந்தனுக்குக் கசப்பாக இருந்தது. இருந்தும் பொறுத்துக்கொண்டான்.



"மீண்டும் எப்பொழுது சந்திக்கலாம்?" என்றான்.



அதற்கு அவள் புன்முறுவலோடு, "சந்திக்கலாம்" என்றாள்.



அதற்கு என்ன அர்த்தம் என்று புரியாமல் விழித்தான் வசந்தன்.



நெடுந்தூரம் பரவியிருந்த மரங்கள்; செடி கொடிகள்; எல்லாமே மறையத் துவங்கின. பரப்பளவு குறுகி குறுகி மறைந்துவிட்டது. மாய நீர்க்குமிழித்திரை மட்டுமே மீதம் இருந்தது. வசந்தன், மாயப் பதக்கத்தை நோக்கினான். அவன் எண்ணங்களைப் புரிந்துகொண்ட அது மாயத்திரையை விலக்கியது.



ஷோபனா குழந்தையைச் சுமந்துகொண்டு நடந்தாள். அவனைத் திரும்பிப் பார்க்கவில்லை. அவன் அவளின் மீதிருந்து பார்வையை விலக்கவில்லை. ஷோபனாவின் தோளின் மேல் தன் தலையைச் சாய்த்துக்கொண்டிருந்த குழந்தை வசந்தனைப் பார்த்துப் புன்னகைத்தது. அவனும் புன்னகைத்து கையசைத்தான். ஒரு மஞ்சள் நிற ஒளி ஷோபனாவின் மீது சூழ்ந்து அவளை மறையவைத்தது.



ஷோபனா மாயமாய் மறைந்ததை இமைகொட்டாமல் நோக்கிக்கொண்டிருந்த வசந்தன், இது போன்ற ஓர் அரிய வாய்ப்பு மீண்டும் கிட்டுமா? என்ற ஒரு கேள்விக்குறியோடு தன் நடையை ராஜீவின் வீட்டுப் பக்கம் திருப்பினான். அப்பொழுது தான் ராஜீவைப் பற்றிய நினைவு அவனுக்கு வந்தது. ராஜீவ் எங்கு போனான்? எங்கு போய் அவனைத் தேடுவது? என்று சிந்தித்தபடியே நடந்தான்.



சரி ஒரு குரல் கொடுத்துப் பார்ப்போமே என்று எண்ணி, "ராஜீவ்வ்வ்..." என்று கூக்குரலிட்டான். ராஜீவ் வரவில்லை. வசந்தன் சிறிது கலக்கம் அடைந்தான். கண்டிப்பாக அவன் வந்துவிடுவான் என்ற நம்பிக்கையில் வீட்டை நோக்கிச் சென்றான்.



*** *** ***



சிறிது நேரத்தில் வீட்டையடைந்து கதவை லேசாகத் திறந்தான். உள்ளே கண்ட காட்சி அவனை நிம்மதியடையவைத்தது.



ராஜீவ் மேஜையின் அருகே உள்ள நாற்காலியில் அமர்ந்துகொண்டு ஆவி பறக்க சூப்பை ருசித்துக்கொண்டிருந்தான்.



வாசலில் அரவம் கேட்டதும் ராஜீவ், சுவைப்பதை நிறுத்தி யாரென்று பார்த்தான். வசந்தனைக் கண்டதும் குடுவையைக் கீழே வைத்துவிட்டு நாற்காலியைப் பின்னுக்குத் தள்ளி ஓடி வந்தான்.



"நண்பா! உனக்கு என்ன ஆனதோ? என்று பதறிவிட்டேன். புயல்காற்றில் சிக்கிவிட்டாயோ? என்று கூட எண்ணிவிட்டேன். இது வரை எங்கு மறைந்திருந்தாய்? எப்படித் தப்பித்தாய்?" என்று அடுக்கடுக்காகப் பல கேள்விகளை எழுப்பினான்.



"அது இருக்கட்டும். நீ எப்படி இங்கு வந்தாய்? அதை முதலில் சொல்" என்றான் வசந்தன்.



ராஜீவ், "அந்த மாயப்பதக்கம் நாம் நினைப்பதை நிறைவேற்றக்கூடியது. நாம் எந்த இடத்திற்குச் செல்லவேண்டும் என்று நினைக்கிறோமோ அங்கு நொடிப்பொழுதில் கொண்டு செல்கிறது. வீட்டில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணினேன். உடனே, இங்கே தூக்கி வந்துவிட்டது" என்று தொடர்ந்துகொண்டே "சொல்! நீ எப்படித் தப்பித்தாய்?" என்றான்.



"உன்னைக் காப்பாற்றியது போல் என்னையும் இந்த மாயப்பதக்கம் தான் காப்பாற்றியது"



"நல்லது. முதலில் இந்த சூப்பைக் குடி. இன்று உன்னை ஒரு முக்கிய இடத்திற்கு அழைத்து செல்லப்போகிறேன்"



"எங்கு?"



"நான் வேலை செய்யும் இடத்திற்கு. அங்கு உனக்கும் ஒரு வேலை வாங்கிக் கொடுக்கப்போகிறேன்"



"உண்மையாகவா? நன்றி நண்பா!"



"உடனே நன்றி சொல்லிவிடாதே!" என்று வசந்தனின் உள்ளத்தில் பொங்கிய மகிழ்ச்சியை நிறுத்தினான் ராஜீவ்.



"அந்த வேலை கிடைப்பது சாதாரணமானதன்று. இன்னும் சில நாழிகைகளில் அதை நீ புரிந்துகொள்வாய்"



"பலத்த பீடிகை போல் அல்லவா தெரிகிறது. உன் வேலை பற்றிக் கூறவே இல்லையே"



"மெமோரியல் உலகத்தில் வேலை செய்யும் பணியாட்களை மரக்கலத்தில் ஏற்றிச் சென்று விடுவது தான் என் வேலை. இந்த வேலை உனக்குக் கிடைத்துவிட்டால் அங்கு வேலை செய்யும் பணியாட்களோடு பழக்கங்கள் ஏற்படும். உனக்கும் உதவியாக இருக்கும்"



வசந்தன் வேலையே கிடைத்துவிட்டது போல் ஓர் கற்பனை செய்து அதில் மிதந்தான்.



"உடனே மகிழ்ச்சி அடையாதே. இந்த வேலை எளிதில் கிட்டாது. ஆபத்தான பரிட்சைகள் நிறைந்திருக்கும்"



ராஜீவ் எச்சரித்தாலும் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கற்பனையிலே தவழ்ந்திருந்தான் வசந்தன்.



சிறிது நேரத்தில் இருவரும் வெளியே கிளம்பினார்கள். குளிர் காற்றில் நடந்து மறைந்தனர்.



*** *** ***



மெமோரியல் உலகிற்குச் செல்லும் மரக்கலங்கள் கடலில் வரிசையாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. அதில் பணியாட்கள் நிரம்பி, செல்வதற்கு ஆயத்தமாகிக்கொண்டிருந்தார்கள்.



அதில் ஒரு மரக்கலத்தில் செல்வம் அமர்ந்துகொண்டு, நிரம்பியிருக்கும் மரக்கலங்களை வெறித்தார். அவருடைய மரக்கலத்தைச் செலுத்துபவன் மட்டும் இன்னும் வரவில்லை என்கின்ற எரிச்சல் அவரின் கண்களில் கொழுந்துவிட்டு எரிந்தது. அந்த மரக்கலம் வேறு யாருடையதும் அல்ல ராஜீவினுடையது தான்.



நீண்ட பெருத்த கடல் தன் அலைக்கரங்களால் மரக்கலங்களைத் தொட்டுத் தொட்டு பார்த்துக்கொண்டிருந்தது. ஒவ்வொரு முறையும் அலை மரக்கலங்களில் பட்டுத் தெறித்து பன்னீர்த் துளிகளாய் அவரின் முகத்தில் அடித்தது.



நிறைந்த இருள்; அதில் ஒளிரும் மீன்கள்; கரையில் மரங்கள்; கடலை ரசித்தபடி பறக்கும் எண்ணற்ற பறவைகள்; கடற்காற்றின் தீண்டுதல்; இவை எதையும் ரசிக்கமுடியாதவராய் இருந்தார் செல்வம்.



"எங்கே போனான் இந்தப் பாதகன்" என்று உறுமினார்.



மற்ற மரக்கலங்கள் மெதுவாகக் கடலினுள் ஆடியபடி சென்றன. அதில் மனிதச் சலசலப்புகள் தொடர்ந்தபடி இருந்தன. பருத்த அலைகள் மரக்கலங்களைச் சாய்க்க கங்கணம் கட்டி மோதியது. ஆனால், மரக்கலங்கள் வளைந்துகொடுத்து தங்கள் வழியில் முன்னேறிக்கொண்டிருந்தன.



செல்வம் இருந்த மரக்கலம் மட்டும் அனாதையாக நின்றுகொண்டிருந்தது. மேலே இருக்கும் நிலவையும் விண்மீன்களையும் நோக்கி நேரத்தைக் கடினமாகப் போக்கிக்கொண்டிருந்தார்.



வசந்தனும் ராஜீவும், கரையோரம் இருக்கும் ஒரு மரத்தின் பின்னால் ஒளிந்துகொண்டு

இதையெல்லாம் கண்காணித்துக்கொண்டிருந்தனர்.



"எதற்கு இங்கே நிற்கிறோம்?" என்றான் வசந்தன்.



"காரணம் இருக்கிறது. அதோ மரக்கலத்தில் அமர்ந்திருக்கிறாரே அவர் தான் மெமோரியல் உலகின் போக்குவரத்திற்கு பொறுப்பு. அவர் நினைத்தால் உனக்கு வேலை வழங்கலாம்"



"அப்படியா? அப்படியென்றால் வா! நாம் வேலை கேட்கலாம்"



"முட்டாள்! நான் சொல்வதை முதலில் கேள். ஏன், எதற்கெடுத்தாலும் அறிவீனமாக முந்துகிறாய்? முதலில் நான் அங்கு செல்கிறேன். இரண்டு நிமிடங்கள் மரக்கலத்தை நகர்த்தாமல் தாமதம் செய்கிறேன். பிறகு நீ வா. அந்தச் சமயத்தில் உன்னைச் சந்திக்கவைத்தால் நன்றாக இருக்கும்"



"சரி" என்றான் வசந்தன்.



ராஜீவ் அங்கிருந்து பூனை போல் நழுவி மரக்கலம் நிறுத்திவைக்கப்படிருக்கும் இடத்திற்கு வந்தான்.



செல்வம் ராஜீவை எரித்துவிடுவதைப் போல் முறைத்தார்.



அவர் திட்டுவதற்கு வாயைத் திறப்பதற்கு முன்னமே ராஜீவ் முந்திக்கொண்டான்.



"ஐயா! மன்னிக்கவும்...மன்னிக்கவும்...தங்களைக் காக்கவைத்து பெரும்பாவத்தைச் சம்பாதித்துவிட்டேன். நேற்று நீங்கள் கண்டிருப்பீர்களே பெரும்சூறாவளி, அதில்

சிக்கிக்கொண்டுவிட்டேன். அதிலிருந்து தப்பிக்க பெரும்பாடுபட்டதால் அசந்து தூங்கிவிட்டேன்" என்று பொய்யான கவலையை முகத்தில் பூசி கண்களில் சிறு குறும்பு மிளிரும்படி கூறினான்.



செல்வத்தின் கூர்மையான கண்கள் ராஜீவின் முகத்தில் ஊடுருவியது. வீணாக நேரத்தைக் கடத்தாமல் செல்லவேண்டுமே என்கிற எண்ணத்தில், "சரி சீக்கிரம் மரக்கலத்தைத் செலுத்து" என்றார்.



ராஜீவ், "உத்தரவு" என்று குழைந்தபடியே படகைச் சுற்றிச் சுற்றி எதையோ செய்துகொண்டிருந்தான்.



என்ன செய்கிறான்? என்று விழித்தார் செல்வம். "என்ன செய்துகொண்டிருக்கிறாய்?" என்று உறுமினார்..



"மன்னிக்கவும். இதோ! இதோ! இப்பொழுது புறப்படுவோம்" என்று பட படப்போடு இருந்த சமயத்தில் சரியாக நுழைந்தான் வசந்தன்.



வசந்தனைக் கண்டதும் நிம்மதி அடைந்த ராஜீவ், "வசந்தா! இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறாய்?" என்றான்.



"உன்னைப் பார்க்கத்தான் வந்தேன்"



"நலமாக இருக்கிறாயா?"



வசந்தன் தலை ஆட்டினான்.



"ராஜீவ்! இப்பொழுது கிளம்பப்போகிறோமா? இல்லையா?" என்று நெருப்பு கனலைக் கண்களில் கொண்டு வந்து கத்தினார் செல்வம்.



"ஐயா! மீண்டும் அடியேனை மன்னிக்கவும். இவன் எனது நண்பன். உங்களுக்கு அறிமுகப்படுத்திவைக்கிறேன். வசந்தா! இவர் தான் என்னுடைய எஜமானர்"



வசந்தன் அவரைப் பார்த்துப் புன்னகைத்தான். நதிகள் கழுவிய கூழாங்கற்கள் போன்ற வசந்தனின் கண்களை நேருக்கு நேர் நோக்கினார் செல்வம். எல்லா விஷயமும் புரிந்து போனது. சலனமற்ற முகத்திற்குத் தாவினார்.



"ஐயா! உங்களிடம் ஓர் உதவி பெறவே உங்கள் நேரத்தை எடுத்துக்கொண்டேன்" என்று பேச்சைத் துவங்கினான் வசந்தன்.



என்ன உதவி என்ற பார்வையை வீசினார் செல்வம்.



"எனக்கு இங்கு பணிபுரிய வேண்டும் என்ற அவா. அதற்கு உங்களின் தயவு எனக்கு வேண்டும்"



"அவ்வளவு தானே? கொடுத்துவிட்டால் போகிறது" என்று புரியாத சிரிப்பை உதிர்த்தார்.



வசந்தன் விழித்தான். அதற்குள் வேலை கிடைத்துவிடும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.



மரக்கலத்திலிருந்து எழுந்தார் செல்வம்.



"ராஜீவ், நாளையிலிருந்து உனக்கு இரு வாரங்கள் வேலை செய்யத் தடை" என்றார்.



"ஐயா! நான் என்ன பாவம் செய்தேன்" என்று அதிர்ந்தான் ராஜீவ்.



"என்னைக் காக்க வைத்ததற்காக. வேண்டுமென்றே தாமதம் செய்து என்னை ஏமாற்றியதற்காக" என்று கூறி மரக்கலத்திலிருந்து மறைந்து நொடிப்பொழுதில் கரையில் தோன்றினார் செல்வம்.



வசந்தனின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன.



வசந்தனை நோக்கி, "தம்பி, வேலை கொடுக்கும் பொறுப்பு என்னுடையதல்ல. அது யாருக்கும் கிடையாது. வேலை தான் உன்னைத் தேர்ந்தெடுக்கும்" என்றார்.



"புரியவில்லை ஐயா!"



"இது ஒரு பரீட்சை தம்பி. இந்தக் கடலை ஒரு முறை நன்றாகப் பார். உன் மனதில் என்ன தோன்றுகிறது?"



"அழகாக இருக்கிறது. ரசித்துக்கொண்டே இருக்கலாம். அலைகளோடு விளையாடத் தோன்றுகிறது. நெடுந்தூரம் நீந்தத் தோன்றுகிறது" என்று மனதில் தோன்றியதைச் சட்டெனக் கூறினான் வசந்தன்.



"உண்மை தான். மேல்புறம் அழகாக இருந்தாலும் உள்ளே அழிவை விளைவிக்கும் விஷயம் இருக்கிறது. இங்கே வேலை தேட வந்து, கொடுக்கின்ற பரிட்சையில் இறங்கி,தோல்வியுற்றவர்கள் மரணித்து துஷ்ட ஆத்மாக்களாக உலவிக்கொண்டிருக்கிறார்கள்"



வசந்தன் பயக்கண்களோடு கடலை வெறித்தான். உள்ளே எண்ணற்ற துஷ்ட ஆத்மாக்கள் நீந்திக்கொண்டிருந்ததை அவனால் கண்டுகொள்ள முடியவில்லை.



"இப்பொழுது சொல். பரிட்சையை ஏற்றுக்கொள்கிறாயா? அல்லது கொடுத்த விவரங்களோடு இங்கிருந்து செல்கிறாயா?" என்றார்.



வசந்தன் ஏற்றுக்கொள்ளலாமா? வேண்டாமா? என்று இருமனதோடு தவித்தான்.



"நேரத்தை விரயம் செய்யாதே. பதிலைச் சொல்!" என்றார் செல்வம்.



மெமோரியல் உலகத்தின் பணியால் இழந்த நினைவுகளை மீட்க இது ஒரு முதல் படி என்று வசந்தனின் உள்மனது உந்தித் தள்ளியது.



"நான் ஏற்றுக்கொள்கிறேன் ஐயா!" என்றான்.



"நல்லது. இன்றிரவு நீ இங்கேயே தங்கவேண்டும். காலை வரை உனக்கு நேரம் இருக்கிறது" என்று ஒரு விஷமச் சிரிப்பை உதிர்த்தார். அதில் நாளை நீ கலங்கிய குரலோடு வேலையும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என்று ஓடப்போகிறாய் என்ற பொருள் ஒளிந்திருந்தது.



"உனக்கு ஒரே ஒரு உதவி செய்கிறேன். எக்காரணத்தைக் கொண்டும் உன் மனோதைரியத்தை விட்டுவிடாதே. விட்டு விட்டால், இதோ இங்கு உலவுகின்ற துஷ்டாத்மாக்களோடு நீயும் கலக்க வேண்டிவரும்" என்று கூறி மரக்கலத்தில் ஏறினார்.



ராஜீவ் தன் கட்டைவிரலை உயர்த்தி, ஜெயித்துவிடு என்று சமிக்ஞை செய்தான். மரக்கலம் நகர்ந்து சென்றது. அது செல்லச் செல்ல சிறியதாக மாறி கடலிலே கரைந்து போனது.



*** *** ***



இரவு நேரம்....



வசந்தன் கடற்கரையிலேயே இருந்தான். வென்றுவிடவேண்டும் என்ற எண்ணம் அவன் உள்ளத்தை அரித்தது. எதுவாக இருந்தாலும் ஒரு கை பார்த்துவிடுவோம் என்று துணிந்தான். கடற்கரையின் மணலில் அமர்ந்தபடி கடலையே வெறித்தான்.



அப்பொழுது அங்கு நடந்த காட்சி அவன் உடலையே உறையவைத்தது. ராட்சத அலையோடு மிரள வைத்த நீல நிறக் கடலின் நிறம் மாறியது. பொன்னிறமாக மாறி ஒரு விந்தையை உண்டு பண்ணியது. என்ன நடக்கிறது? என்று புதிரோடு விழித்தான் வசந்தன். பொன்னிறக் கடல் ஜகஜோதியாக மின்னி அவனுள் ஒரு பரவசத்தை உண்டு பண்ணியது. தன்னையறியாமல் எழுந்தான்; நடந்தான்.



மின்வெட்டும் நேரத்தில், ஏன் நாம் கடலைப் பார்த்தபடி செல்கிறோம் என்றெண்ணி அவசர அவசரமாகப் பின்னோக்கி நடந்தான். பொன்னிற அலைகள் அவனைப் பிடிக்கத் துரத்துவதைப்போல் கரையை நோக்கி ஓடி வந்தன. என்ன நடக்கிறது இங்கே? என்று எண்ணக்கூட மறந்துபோய் மிரண்டு போயிருந்தான் வசந்தன்.



குளிர் காற்று மெல்ல மெல்ல அங்கே வலம் வந்து கொடூர பனி மழையாகப் பொழியத்தொடங்கியது. அதிலிருந்து தற்காத்துக்கொள்ள வசந்தனுக்கு ஏதுமில்லை. நிராயுதபாணியாக நின்றான். அவன் உடலில் வெள்ளை முத்துக்களாலான பனி மெல்ல மெல்ல விழுந்து ஒரு போர்வையாகப் படர்ந்தது.

குளிர் ஒரு பக்கம். மயக்கம் ஒரு பக்கம் என்று அவனைப் பல திசைகளில் இழுத்தன துன்பங்கள்.

கடற்கரை மணலில் விழுந்தான்.



கொஞ்சம் கொஞ்சமாக தின்று கொண்டிருந்த குளிரை எதிர்த்துப் போராடாமல் அதை ரசிக்கத் துவங்கினான். அது எப்படி உடலில் பரவுகிறது? என்று ஆராயத் தொடங்கினான். இந்த வித்யாசமான சிந்தனை குளிர் என்ற அரக்கனிடம் இருந்து அவனைக் காக்கத் தொடங்கியது. குளிரை ரசித்துக்கொண்டிருந்த அவனை மயக்கம் அணைத்துக்கொண்டது.



பொன்னிறக் கடலின் அடியில் தீய ஆத்மாக்கள் கொடூர சத்தங்களை எழுப்பியபடி மேலே வரத் துவங்கின...



தேடல் தொடரும்...

0 comments: